Rain back to Chennai: சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை! வெதர்மேன்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் முதல் இரவு வரை மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.

இதைத் தொடர்ந்து வேளச்சேரி, கிண்டி, முகப்பேர், கோயம்பேடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து பூமியே குளிர்ச்சியான சூழலில் உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில் கூறுகையில், மார்ச் 11, 12 ஆம் தேதிகளில் மழை திரும்ப வந்துவிட்டது. இன்றும் நாளையும் வெப்பநிலை குறையும். தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அது போல் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். கடந்த ஆண்டுகளை போல் ஒட்டுமொத்தமாக வறண்ட வானிலையே நிலவாமல் ஆங்காங்கே மழை இருக்கும். ஜனவரி 13 முதல் 15 ஆம் தேதி வரை காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும்.
அது போல் ஜனவரி 18, 19 ஆம் தேதி தமிழகத்தில் தென் தமிழகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, டெல்டா ஆகிய மாவட்டங்களில் மழை பரவலாக பெய்தது.
அது போல் ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப். 2 ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக் கூடும்.
பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை டெல்டாவிலும் தென் தமிழகத்திலும் கனமழை பெய்தது. அது போல் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. அதிலும் தென் தமிழகத்திற்கு கனமழை பெய்யும்.
சென்னை முதல் வேலூர் வரை மதியம் முதல் இரவு வரை சில இடங்களில் மழை பெய்யக் கூடும். எனவே ரெயின்கோட், குடையுடன் செல்லவும். தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குற்றால நீர் வீழ்ச்சிகளில் அதிகளவு தண்ணீர் விழுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கொங்கு பகுதிகளில் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இன்று தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக வெப்பநிலை என்பது இதமாக இருக்கும். இந்த இதமான சூழலை இரு நாட்களுக்கு என்ஜாய் செய்யுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுடைய அரசு ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மழை எச்சரிக்கையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடதமிழகத்தில் புதுவை, காரைக்கால் வரை மிதமான மழை பெய்யக் கூடும். இன்றும் நாளையும் தென் தமிழகம் முழுவதும் மேகக் கூட்டங்கள் நிறைந்திருக்கும். எனவே பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications