சென்னையில் பலத்த காற்றுடன் இரவில் கொட்டிய மழை! அடுத்த 48 மணிநேரம் எப்படி இருக்கும்? முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் இன்று இரவில் இருந்து பல இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை ராயப்பேட்டை, அடையாறு, வடபழனி, தேனாம்பேட்டை, பெரும்பாக்கம் உள்பட பல இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணிநேர வானிலை நிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நாம் தென்மேற்கு பருவமழை காலத்தில் இருக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை தென்மேற்கு பருவமழை என்பது 64 சதவீதம் வரை கூடுதலாக பெய்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இன்றயை தினம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையின் ஒட்டுமொத்தமாக சராசரி 204.4 மில்லி மீட்டர் தான். ஆனால் இப்போது வரை 335.4 மி.மீ மழை பெய்திருக்கிறது.

இன்னும் தென்மேற்கு பருவமழை காலம் முடிவுக்கு வரவில்லை. இதனால் இந்த பருவமழையின் அளவு என்பது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் பல இடங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கையை தந்துள்ளது.
அதாவது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். இதன்காரணமாக வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.
இந்நிலையில் தான் இன்று மாலை முதல் சென்னையில் இதமான சூழல் நிலவி வருகிறது. இரவு 7 மணியளவில் சில இடங்களில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. இரவு 8 மணியளவில் சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை என்பது பெய்ய தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டை, அடையாறு, வடபழனி, தேனாம்பேட்டை, பெரும்பாக்கம், ஆவடி, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், வேளச்சேரி, ரெட்ஹில்ஸ், கோடம்பாக்கம், மேடவாக்கம் உள்பட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இரவு நேர மழையால் தங்களின் வேலையை முடித்துவிட்டு அலுவலகங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுதவிர முகப்பேர் உள்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 30) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டடத்துடன் காணப்படும். மேலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 31) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டடத்துடன் காணப்படும். மேலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications