சென்னை கடற்கரையில் இருந்து 50 கிமீ தொலைவில் மேகங்கள்.. மழை பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பரபரப்பு பதிவு
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரை ஒட்டிய கடற்கரைக்கு அருகில் வந்துள்ளது. ஆனால் மழை மேகங்களின் பெரும்பகுதி இன்னும் கடலில் தான் இருக்கிறது. தற்போதைய நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அடுத்த 1-2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டு இருந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர இருக்கிறது. முன்னதாக இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்ட நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழக கடலோரப் பகுதிகளை அடைய உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதன் காரணமாக இன்றும், நாளையும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவும் இன்று அதிகாலையும் கடுமையான குளிர் இருந்தது.இதுவரை இல்லாத அளவிற்கு 21 டிகிரி செல்சியஸ் வரை வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் காலையில் இருந்தே வானம் கடுமையான மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "இன்றும் நாளையும் பெய்யும் மழை வருகிறது. - சென்னைக்கு மிகக் குளிர்ச்சியான இரவுகளில் ஒன்றைக் கொடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்று பார்ப்போம். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 18 (இன்று) மற்றும் 19 (நாளை) ஆம் தேதிகள் மழைக்கு சிறந்த நாட்கள் ஆகும் . சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அடுத்த 1-2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யத் தொடங்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைக்கு அருகில் வந்துள்ளது. இதனால் சென்னைக்கு குளிர்ந்த இரவுகளில் ஒன்றாக நேற்று இருந்தது. இன்று ஈரப்பதம் நகர்ந்து சிறிது வெப்பத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் மழை மேகங்களின் பெரும்பகுதி இன்னும் கடலில் உள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அடுத்த சில மணிநேரங்களில் முதல் மிதமான மழை வட சென்னையிலிருந்து தொடங்கி அதன்பிறகு நகரின் பிற பகுதிகளில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகம் செல்வோர், மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தவறாமல் போகலாம். இதுவே கடைசி மழையாக இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. கிறிஸ்மஸுக்குப் பிறகு, 26-27 மிதமான மழை பெய்யும். கிழக்கு அலை காரணமாக அந்த மழை இருக்கும். ஆனால் இன்றும் நாளையும் நகரத்திற்கு இந்த சீசனில் நல்ல மழை பெய்ய கடைசி வாய்ப்பாக பார்க்கலாம். நமக்கு தேவையான குடிநீரைக் கொடுத்த இந்த பருவமழையை அனுபவிப்போம்.
1. இந்த மழையால் நீங்கள் பயப்பட வேண்டுமா, இல்லை என்பதே பதில்.
2. யூடியூப்பில் அரக்கன் வருவதாக வரும் தகவல்களை பார்த்து பயப்பட வேண்டுமா என்றால், இல்லை என்பதே பதில்.
3. அணைகள் நிரம்பியிருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டுமா, இல்லை என்பதே பதில். நன்கு சேமிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களான டெல்டா, விழுப்புரம் கடற்கரை பகுதிகள், புதுச்சேரி கடலூர் - மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழக குமரியில் மட்டும் ஓரளவு லேசான மழை பெய்யும். பொதுவாக இந்த மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டுமே பெய்யும், ராணிப்பேட்டையிலும் லேசாக மழை பெய்யலாம்.












Click it and Unblock the Notifications