‛கனமழை வார்னிங்’.. வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு
கோவை: கனமழையின் காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் கொங்கு மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. அதேபால் நாளை (செவ்வாய்க்கிழமை) பல இடங்களில் மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்'' என கூறப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் இன்று பல இடங்களில் மழை பெய்தது. நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications