Cyclone Ditwah: என்ட்ரி ஆன “டிட்வா” புயல்.. சென்னையை நோக்கி நகர்கிறது? 29, 30 ஆம் தேதி சம்பவம் தான்!
சென்னை: மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான 'சென்யார்' புயல் இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்தது என்றும், வங்க கடலில் புதிதாக ஒரு புயல் "டிட்வா" (Cyclone Ditwah) உருவாகி உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இது புதுவை, சென்னை, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மதியம் 2 மணி நிலவரப்படி இந்த புயல் சென்னைக்கு 700 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
புயல் உருவாகும் என கூறப்பட்டதை தொடர்ந்து, இன்று காலையில் தமிழகம், புதுச்சேரியிலுள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவிழந்த சென்யார் புயல்
அந்தமான் அருகே மலக்கா ஜலசந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலகாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இந்தோனேசியா அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
ஆனால் மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான 'சென்யார்' புயல் இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்தது. இந்த நிலையில், வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
உருவாகியது புதிய புயல்
தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு இலங்கை பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைந்து புதுவை, சென்னை, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என சொல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது வங்கக் கடலில் டிட்வா புயல் உருவானது என்றும் தற்போது சென்னையில் இருந்து 700 கிமி தொலைவியில் மையம் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாடு பரிந்துரைத்த "டிட்வா" என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரியிலுள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள சூழலில் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பதாகும்.
சென்னையில் இருந்து 700 கிமீ தொலைவில்
இந்த புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம், தென் ஆந்திர பகுதிகளுக்கு இடையே நகர வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, கடலோர மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications