தீவிர புயலாக வலுப்பெற்ற டானா.. நாளை ஒடிசாவுக்கும், மேற்கு வங்கத்திற்கும் இடையே கரையை கடக்கிறது
புவனேஷ்வர்: வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது இது தீவிர புயலாக வலுப்பெற்றிருப்பதாகவும், நாளை அதிகாலை இது கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் காலத்தில் வங்க கடலில் புயல் உருவாவது வழக்கமானதுதான். ஆனால் இந்த முறை சற்று முன்னதாக அக்டோபர் மாதத்தில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரையின்படி, டானா என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே கரையை கடக்க இருக்கிறது. எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஒடிசா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

புயல் கரையை கடக்கும் பகுதிகளில், சுமார் 10 லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றும், இவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இப்போது வரை சுமார் 3-4 லட்சம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இன்று காலை 11 மணிக்குள் மீதமுள்ள மக்களை அப்புறப்படுத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அதேபோல 27ம் தேதி நடைபெற இருந்த ஒடிசா சிவில் சர்வீஸ் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100-120 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒடிசாவின் பாலசோர், பத்ரக், கேந்த்ராபாரா, ஜகத்சிங்பூர், பூரி, குர்தா, மயூர்பஞ்ச், கியோஞ்சர், ஜாஜ்பூர், கட்டாக் மற்றும் தேன்கனல் ஆகிய மாவட்டங்களில் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. பாதிப்புகளை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), இந்திய கடலோரக் காவல்படை, ஒடிசா தீயணைப்பு படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRAF) ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன.
இப்போது வரை 800 புயல் பாதிப்பு முகாம்களையும், 500 தற்காலிக முகாம்களையும் அமைத்திருப்பதாகவும், தேவையெனில் கூடுதல் முகாம்களை அமைப்போம் எனவும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. புயல் இன்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயல் காரணமாக ஒடிசாவிலிருந்து இயக்கப்படும், ஒடிசாவுக்கு வந்த சேரும் 222 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications