டிட்வா சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? வலு குறைந்ததா! வானிலை மையம் விளக்கம்
சென்னை: வங்கக் கடலில் உருவாகி இருந்த டிட்வா புயல் தற்போது சென்னை கடலோர பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில், வங்கக் கடலில் உருவாகி இருந்த இந்த புயல், இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். 200-க்கும் அதிகமானோர் காணாமல் போய் உள்ளனர். ஏராளமான நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் மக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து இருக்கிறது.

இந்த புயல் சென்னைக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக்கு அருகே தற்போது நிலை கொண்டிருக்கிறது.
சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 12 மணி நேரமாக வலு குறையாமல் அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது மேலும் 6 மணி நேரத்திற்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் என்றும், 12 மணி நேரத்திற்கு பின்னர் வலு குறைந்து வடக்கு நோக்கி நகரலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை 12 மணி நேரத்தில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது. குறிப்பாக வட சென்னையில் 15 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இன்று இரவு மழை ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. ஆனால் திடீரென உருவாகும் மழை மேகங்களால் கனமழை பெய்யக்கூடும். நாளை இரவு வரை கூட அல்லது புதன்கிழமை காலை வரை கூட இந்த மழை நீடிக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 13 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 19 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. பாரிஸ் கார்னர், மணலி புதுநகர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் 16 செ.மீ அளவுக்கும், பேசின் பாலம், ஐஸ் ஹவுஸ், விம்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 செ.மீ அளவுக்கும், வடபழனி, கத்திவாக்கம், காசிமேடு பகுதிகளில் 12 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications