டிட்வா புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை.. சென்னை விரையும் NDRF குழுக்கள்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலை தொடர்ந்து, இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். டிட்வா புயல் மீட்புப் பணிகளில் 14 தேசிய பேரிடர் குழுக்கள் களமிறங்கியுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 30 பேர் வீதம் 14 மீட்புக் குழுக்கள் களத்தில் செயல்பட்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் 'டிட்வா' புயல் உருவானது. இந்த புயல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை (நவம்பர் 30) அதிகாலையில், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிட்வா புயல் கரையை நோக்கி நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் உள்ளது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல், நாளை அதிகாலையில் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். டிட்வா புயலால் தற்போது இலங்கை முழுவதும் அதி கனமழை பெய்து வரும் நிலையில், புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இங்கும் மழை அளவு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இந்த புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 14 மாவட்டங்ளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'டிட்வா' புயல் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. புயலானது சென்னை, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கிழக்கு கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு அதிகனமழை பெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த புயல் சென்னை மற்றும் புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தால் அதன் காரணமாக மரக்காணத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். மேலும் மரங்கள் விழுந்து சாலைகளும் துண்டிக்கப்படும். எனவே இந்த புயலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மரக்காணம் பகுதியில் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழு துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிட்வா புயல் மீட்புப் பணிகளில் 14 தேசிய பேரிடர் குழுக்கள் களமிறங்கியுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 30 பேர் வீதம் 14 மீட்புக் குழுக்கள் களத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10 குழுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. 5 குழுக்கள் புனேவில் இருந்தும், 5 குழுக்கள் வதோதராவில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் வருகை தருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "புயலை எதிர்கொள்ள அனைத்து விதமான தளவாடங்களுடனும் தயார் நிலையில் இருக்கிறோம். சென்னையில் ஒரு தேசிய பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளது. மேலும், 5 குழுக்கள் இன்று மாலைக்குள் தயாராகிவிடும். இன்று பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தற்போது தயார் நிலையில் குழுக்கள் உள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications