18 மணி நேரமாக சென்னைக்கு பக்கத்தில்.. நங்கூரமிட்டு நின்ற டிட்வா! காரணம் இதுதான்! வெதர்மேன் விளக்கம்
சென்னை: வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியிருந்த டிட்வா புயல், மெல்ல நகர்ந்து சென்னை அருகே வந்து சேர்ந்தது. ஆனால் கடந்த 18 மணி நேரமாக, சென்னையை விட்டு நகராமல் நிலை கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
டிட்வா புயலாக உருவானாலும், இலங்கையில் தனது மொத்த பலத்தை அது இழந்துவிட்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கிறது. கடந்த 18 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால், சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணம் வங்கக்கடலில் உள்ள மேலடுக்கு தாழ்வு பகுதிதான் என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார். அதாவது, "இந்திய நிலப்பரப்பின் மேற்கு திசையில் இருந்து வரும் பலவீனமான மேலடுக்கு தாழ்வு பகுதி அல்லது வளிமண்டல காற்று மண்டலம் சென்னைக்கு அருகே உள்ள, டிட்வா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை கிழக்கு திசை நோக்கி நகர்த்த முயற்சிக்கிறது. சாதாரணமாகவே இந்த மேற்கத்திய காற்று, புயல்களை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு கிழக்கு நோக்கியோ நகர்த்தி செல்லும்.
ஆனால், கிழக்கு திசையில் வங்கக்கடலில் ஒரு உயர் அழுத்தம் உருவாகியுள்ளது. இதை உயர் அழுத்த பகுதி என்று சொல்வார்கள். இது வலுவாக இருக்கிறது. இந்த உயர் அழுத்த பகுதியானது, ஒரு சுவர் போல செயல்பட்டு சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் டிட்வா காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நகர விடாமல் தடுக்கிறது. எனவேதான் டிட்வா சென்னைக்கு அருகே கடந்த 18 மணி நேரமாக நிலை கொண்டிருக்கிறது.
டிட்வா காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வடமேற்கு பகுதியில் திடீரென மேகங்கள் தீவிரமடையவும் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சொன்ன மேற்கத்திய தாழ்வு பகுதியுடன், இந்த திட்டுவா காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பு கொண்டு அதிக ஈரப்பதத்தையும், ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது. இதுதான் திடீர் மழைக்கு காரணமான மேகங்களை உருவாக்குகிறது. எனவேதான் சென்னையில் கனமழை பெய்து இருக்கிறது.
சரி இது எப்போது சென்னையை விட்டு நகரும்? என்று கேட்டால் அதற்கு இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய தாழ்வு பகுதியில் தாக்கம் புதன்கிழமை குறையும். எனவே சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் டிட்வா காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாளை மறுநாள் தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திராவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து நிலப்பகுதிக்குள் நுழைந்து வலுவிழக்கும்.
கடந்த 2015 ஆம் ஆண்டும் இதே போன்ற மழையை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கொடுத்திருந்தது. ஆனால், அது இந்த புயலை போல ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ளாமல் வேகமாக நகர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது.
நேற்று இரவு தொடங்கி இன்று மாலை வரை, சென்னையில் இடைவிடாமல் மழை பெய்திருந்தது. ஆனால் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இடைவேளை இருந்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னை, பொன்னேரி. கவரப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புதிய மேக கூட்டங்கள் வேகமாக உருவாகி வலுவடைந்து வருகின்றன. இதனால் விரைவில் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் மழையின் எதிர்பார்க்கலாம். சென்னையில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications