Cyclone ditwah: எங்கடா அவன்? பைபாஸ்லயே வந்துட்டு பொசுக்குனு போயிருச்சே! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள நிலையில், சென்னையை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரை வழியாகச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வறண்ட காற்று உருவாகி புயல் வலுவிழந்துள்ளதாகவும், நாளை வரை சென்னையில் மழை மேகங்கள் உருவாகும் எனவும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூருக்கு இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படலாம் என 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
டிட்வா புயல் நாகையில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 230 கி.மீ தூரத்திலும் தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டும் என கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராத வகையில் உருவான வறண்ட காற்று, கடலிலிருந்து வரும் ஈரக்காற்றைத் தடுக்க காரணமாகி, புயலின் வலிமை திடீரென குறைந்ததாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

பிரதீப் ஜான் தனது பதிவில், "வறண்ட காற்று மற்றும் ஈரக்காற்று முறிவு காரணமாக டிட்வா புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. அதன் காரணமாக, மழை அடிப்படையில் அதிக தாக்கம் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்டது. மயிலாடுதுறையில் மட்டும் 140-220 மிமீ மழை பதிவானது. இதனுடன் சேர்த்து சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து மழை பெறும்.
புயல் பலவீனமடைந்தாலும், இது முற்றிலும் முடிந்துவிட்ட நிலை அல்ல. அடுத்த 24 மணிநேரத்திற்கு மிகுந்த மேகக்கவசம் இருக்காது. காலை நேரத்தில் மழை குறைவாக காணப்பட்டாலும், இன்று மாலை புதிய மேகக்கூட்டங்கள் உருவாகும். அது உருவான பிறகு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
வேலூர், ராணிப்பேட்டை, இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை சென்னைக்கு மிக அருகில் புயல் வரலாம்" என்ற எச்சரிக்கையும் பதிவிட்டுள்ளார்.
பிரதீப் ஜான் மேலும் கூறியதாவது:," KTCC பகுதிகளில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) இன்று காலை வரை 30-70 மிமீ மழை பதிவு செய்துள்ளது. மேகங்கள் மீண்டும் உருவாகினால், நாளைக்குள் 50-70 மிமீ வரை கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அட்சரேகைக்குக் கீழே இருக்கும் வரை, மழைக்கான வாய்ப்பு நீடிக்கும். இன்றும் IMD ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சென்னையில் இந்த நவம்பர் மாதம் பெய்த மழை, 2016க்கு பிறகு மிகக் கடுமையான நவம்பர் மழை. இதுகுறித்து தனி பதிவும் பகிரப்படும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications