இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு.. சென்னையில் அதி கனமழை பெய்யும்.. டெல்டா வெதர்மேன் வார்னிங்!
சென்னை: நவம்பர் மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இந்த புயலால் வட மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். குறிப்பாக வரும் 15 ஆம் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும் என்றும், நவம்பர் கடைசி வாரத்தில் புயலால் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஹேமசந்தர் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது மழை குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த வாரத்தில் இருந்து கனமழை கொட்டும் என வானிலை மையம் கூறியிருந்தது.

மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. இந்த நிலையில் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர், இந்த மாத இறுதியில் ஒரு புயலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். ஹேமசந்தர் கூறியிருப்பதாவது:-
நவம்பர் மாத இறுதியில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யும். முதல் பாதியில் வெயில் சுட்டெரித்து கொளுத்தி எடுத்தாலும், மாதத்தின் இரண்டாம் பாதத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக வரும் 12 ஆம் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது. இதற்கு பிறகு வரும் 15 ஆம் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும்.
வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டும்
தொடர்ந்து 4-வது வாரத்தில் அதாவது 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்கு இடைபட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளது. இந்த புயலினால் வட மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்து, மழை பாதிப்பை கொடுக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட குறைவாகவே மழை இருக்கும் என்று கூறியிருந்தது.
தென் மாவட்டங்களில் கனமழை
தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், அதனை தொடர்ந்து வரும் 8, 9, 10 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
இன்று எங்கு மழை பெய்யும்
மேலும், “சென்னையில் இன்று (05-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதேபோன்று இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என்று வானிலை மையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications