மிரட்டும் மிக்ஜாம் புயல்.. சென்னை ஏர்போர்ட் இன்று நாள் முழுக்க மூடல்! எப்போது மீண்டும் திறக்கப்படும்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகத் தலைநகர் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், சென்னை ஏர்போர்ட் இன்று நாள் முழுக்க மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்த நிலையில், அது நேற்றைய தினம் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு "மிக்ஜாம்" என்று பெயரிடப்பட்டது.

இந்த மிக்ஜம் புயல் வடமேற்கே நகர்ந்து வருகிறது. இது பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 90 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இப்போது தீவிர புயலாகவும் வலுப்பெற்றுள்ளது.
கொட்டும் மழை: இந்தப் புயல் காரணமாக நேற்று விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், இரவு கனமழை ஆரம்பித்தது. இரவு தொடங்கிய கனமழை இப்போது வரை கொட்டி தீர்த்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் என்று இல்லாமல் சென்னை நகர்ப் பகுதிகள் புறநகர்ப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. எங்கும் கேப் விடாமல் மழை கொட்டி வருகிறது.
இதனால் ஒட்டுமொத்த சென்னையும் முடங்கிப் போய் இருக்கிறது. ஏற்கனவே இந்தப் புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மின் இனைப்பு துண்டிப்பு: கனமழை தொடரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் இருப்போரை மீட்கும் பணிகளும் நடந்து வருகிறது. அவர்கள் தங்கச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களிலும் மழை கொட்டுவதாலும், தண்ணீர் தேங்கி இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இன்று இரவு வரை தொடரும் என்றும் அதன் பின்னரே மழை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரைக்காற்றும் பயங்கரமாக வீசும் நிலையில், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் கனமழை தொடரும் நிலையில், சென்னை விமான நிலையம் இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஏர்போர்ட் இப்படி மழை காரணமாக முழுமையாக நாள் முழுக்க மூடப்படுகிறது.
சென்னை ஏர்போர்ட் மூடல்: முன்னதாக மழை காரணமாகக் காலை 9.30 முதல் முற்பகல் 11.30 வரை ஏர்போர்ட் மூடப்பட்டது. விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதால் ஏர்போர்ட் மூடப்பட்டது. இதற்கிடையே புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கும் நிலையில், இன்று நாள் முழுக்க ஏர்போர்ட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 11 மணி வரை சென்னை விமான நிலையத்தில் வருகை/ புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலை பகுதியில் 250 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. இரவுக்குப் பிறகு மழை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இருக்கும் நிலைமையைப் பொறுத்து விமானச் சேவை இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications