சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) போக்குவரத்துக்கு தடை-ஏரிகள் நிரம்பி பள்ளிக்கரணை சாலைகளில் வெள்ளம்!
சென்னை: மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை- புதுச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணையில் 2 ஏரிகள் நிரம்பியதால் நடு சாலையில் காட்டாறு போல வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
வங்கி கடலில் நகரும் மிக்ஜாம் புயல் சென்னை புறநகர்களில் சில மணிநேரங்களில் பேய்மழையை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மாநகரின் பெரும்பாலான புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் மிதக்கின்றன.

சென்னை புறநகரில் நாராயணபுரம், கோவிலம்பாக்கம் ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் காட்டாறு போல வெள்ளம் குடியிருப்புகளுக்குள் பாய்ந்தோடுகிறது. எப்போதும் பிஸியாக இருக்கும் பள்ளிக்கரணை சாலையில் இன்று கழுத்தளவுக்கு ஏரிகளின் உபரி நீர் கரைபுரண்டோடுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிப் பகுதியின் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த பெருமழை வெள்ளத்தால் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு முழுமையாக தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பழைய மகாலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், பள்ளிக்கரணை, மாம்பாக்கம், சோழிங்கநல்லூர் என "ஏரிகள்" சூழ்ந்திருந்த பகுதிகள் இப்போது கண்ணுக்கெட்டிய தொலைவு வெள்ளமாக காட்சி தருகின்றன. சாதாரண மழை பெய்தாலே சோழிங்கநல்லூர்- தாம்பரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தற்போதைய பேய்மழையா பல அடிக்குமாடு குடியிருப்புகளில் சில தங்கள் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
இதேபோல நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து மீனவர்களின் படகுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதனிடையே மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த அதீத கனமழையின் வெள்ள நீரை கடலும் உள்வாங்கவில்லை; அதாவது கடல் சீற்றமாக இருப்பதால் வெள்ள நீரும் உள்வாங்கப்படவில்லை என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications