சொல்லி அடிக்கும் மிக்ஜாம் புயல்.. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி வரும் நிலையில், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த புயல் சுமார் 100 கிமீ தொலைவில் இருக்கும் நிலையில், மிக்ஜாம் புயல் இப்போது தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த கனமழையால் சென்னையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை: புயல் காரணமாக இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், புயல் பாதிப்பு காரணமாகப் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எச்சரித்தபடியே இன்று காலை முதல் எல்லா இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மிக்ஜாம் புயல் நாளை முற்பகல் ஆந்திரா அருகே கரையைக் கடக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை புயல் கரையைக் கடக்கும் போது இன்று பெய்த அளவுக்கு மழை இருக்காது என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்று மாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது விடுமுறை: இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளைய தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களும் கூட தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
டாஸ்மாக் கடைகள்: இதற்கிடையே புயல் காரணமாக நாளைய தினம் (டிச்.5) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், நாளையும் அவை இயங்காது.. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், ""இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications