சென்னையில் கொட்டும் பேய் மழை.. எப்போது நிற்கும் தெரியுமா? மிரட்டும் மிக்ஜாம் புயல் ‛எபெக்ட்’
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் சென்னையில் பெய்யும் கனமழை எப்போது நிற்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் 'மிக்ஜாம்' புயல் நேற்று உருவானது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவ உள்ளது.

அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.
இந்த புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது.
சென்னை கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை நீர் வடிகால் அமைப்புகளை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. பல இடங்களில் கார்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை தந்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் பெய்யும் அதி கனமழை எப்போது நிற்கும்? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறுகையில், ‛‛மிக்ஜாம் புயல் என்பது வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் நாளை கரையை கடக்கிறது. செயற்கைகோள் படங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த புயல் தற்போது சென்னையை தான் சுற்றி வருகிறது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றாலும் கூட அந்த நகர்வு என்பது மிகவும் மெதுவாக இருக்கிறது.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. புயல் ஆந்திரா நோக்கி நகரநகர சென்னையில் மழை என்பது குறையும். அப்படி பார்த்தால் இன்று இரவு 12 மணி வரை சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கனமழை என்பது இருக்கும். இருப்பினும் அதி கனமழை என்பது மாலையில் இருந்தே குறையலாம். நாளை அதிகாலையில் பல இடங்களில் லேசான மழை இருக்கும். சில இடங்களில் கனமழை இருக்கும்'' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications