மிக்ஜாம் புயல்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு வரும் 45,000 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றம்!
திருவள்ளூர்: மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையை அடுத்த பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 45,000 கன அடி நீரும் அப்படியே கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுவதால் கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் தமது கோரத்தாண்டவத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 47 ஆண்டுகள் இல்லாத பெருமழையை கொட்டித் தீர்த்திருக்கிறது மிக்ஜாம் புயல். ஒரு சில மணிநேரங்களிலேயே சராசரியாக 20 செமீ மழையை கொட்டிவிட்டது மிக்ஜாம் புயல். வடகிழக்கு பருவமழை 6% பற்றாக்குறை என்கிற நிலைமையை ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்த மழை 29% கூடுதல் பருவமழை என தலைகீழாகப் புரட்டிவிட்டது. இதனால் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகி கிடக்கின்றன.

சென்னையை சுற்றிய ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் அப்படியே குடியிருப்புகள், சாலைகளில் ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் அடையாற்று ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து 25,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆந்திரா எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 45,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் அவ்வளவு நீரையும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் பெரும் வெள்ளம் கரைபுரள்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications