புரட்டிப் பெடலெடுத்துவிட்டுப் போன மிக்ஜாம் புயல்: சென்னையில் 45 மணிநேரத்தில் 47 செ.மீ மழை பதிவு!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் கடந்த 45 மணி நேரத்தில் மட்டும் 47 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
வங்க கடலில் எத்தனையோ புயல்கள் உருவாகி சென்னைக்கு அருகே கடந்திருக்கின்றன. ஆனால் வரலாறு காணாத வகையில் மிக்ஜாம் புயல் தமது ருத்ரதாண்டவத்தைக் காட்டியது.

பொதுவாக புயல்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்; இதனால் சில மணிநேரங்கள் அல்லது பல மணிநேரங்கள் கனமழை கொட்டித் தீர்க்கும். இது இயல்பானதுதான். ஆனால் தற்போதைய மிக்ஜாம் புயல் வேற மாதிரி லெவல் காட்டிவிட்டது. சென்னைக்கு மிக அருகில் சுமார் 30 மணி நேரம் வங்க கடலில் அப்படியே நிலை கொண்டு நின்றுவிட்டது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக இடைவிடாத பெருமழை கொட்டித் தீர்த்துவிட்டது.
திங்கள்கிழமை இரவு முதல் விடிய விடிய பேய்மழை வெளுத்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரையும் இந்த மழை தொடர்ந்தது. இதனால் சென்னை மாநகரும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தால் மூழ்கிப் போயின. சென்னை புறநகர் பகுதிகளில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் குடியிருப்புகள், சாலைகளில் காட்டாறு வெள்ளம் போல பாய்ந்தோடி பெரும் அச்சத்தை உருவாக்கிவிட்டது.
சென்னையில் இருந்து நேற்று இரவு முழுவதுமாக மிக்ஜாம் புயல் விலகிச் சென்றது. தற்போது ஆந்திராவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் கரையை கடக்க உள்ளது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் மொத்தமாக 47 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் காட்டுப்பாக்கத்தில்தான் மிக அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ. மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் அதிகபட்சமாக 20.4 செ.மீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications