120 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது.. சூறாவளியாக மாறி சுழன்று கரையை கடக்கும் ரெமல் புயல்
புதுடெல்லி: 'ரெமல்’ புயல் தீவிர புயலாக மாறி வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் கரையை கடந்து வருகிறது. காற்றின் வேகம் 110 முதல் 120 கிமீ வேகத்தில் வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், கொல்கத்தாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமானச் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் உட்பட 394 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியளவில், சாகர் தீவில் இருந்து 240 கிமீ தெற்கு-தென்கிழக்கே புயல் மையம் கொண்டு இருந்தது. இரவு 9.30 மணி முதல் அது கரையைக் கடக்க ஆரம்பித்துள்ளது.
மே 26-27 தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாம் மற்றும் மேகாலயாவிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மே 27-28 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மே 27-28 தேதிகளில் நாடியா மற்றும் முர்ஷிதாபாத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

வங்கதேசமும் புயலை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றத் தொடங்கியது. கடலோர மாவட்டங்களான சத்கிரா மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளில் அதிக அலைகள் எழும் என்றும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தரவனம் சதுப்பு நிலக் காடுகளில் தலா 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளனர். சந்தேஷ்களி மற்றும் ஹிங்கல்கஞ்ச் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம், மின்சாரம், சுகாதாரம் ஆகிய துறைகளும் முழு ஏற்பாடுகளை செய்துள்ளன. 50,000 குடிநீர் பாக்கெட்டுகள் மற்றும் போதுமான உலர் உணவு பாக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்திய கடற்படை, பேரிடர் நிவாரணத்திற்கு தயாராகியுள்ளது. இரண்டு கப்பல்கள், சீ கிங் மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்கள், டோர்னியர் விமானம், டைவிங் குழுக்கள் மற்றும் வெள்ள நிவாரணக் குழுக்கள் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளன.
உலக வானிலை அமைப்பு புயல்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறது. 119 முதல் 153 கிமீ/மணி வேகத்தில் காற்று வீசும் 'ரெமல்' சூறாவளி வகையாகும். எனவே நிவாரணம் மற்றும் மீட்புக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் உள்ளன.












Click it and Unblock the Notifications