தமிழகத்தை நெருங்கும் புயல்.. துறைமுகங்களில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இந்த புயல், கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை நெருங்கி வந்துக்கொண்டிருக்கிறது. எனவே, முக்கிய துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் உருவாவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி வாக்கில் தென் கிழக்கு வங்கக்கடலில், மிகச்சரியாக சொல்வதெனில் அந்தமான், நிகோபர் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல, காற்றழுத்த தாழ்வு மையமாக இது வலுப்பெற்றது. மட்டுமல்லாது தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வர தொடங்கியது.

நேற்று முன்தினம் இந்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக உருவாகியிருந்தது. ஆனால் இதன் நகரும் வேகம் குறைந்தது. சில மணி நேரம் வரை ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. இதை உன்னிப்பாக கவனித்த வானிலை ஆய்வாளர்கள், தாழ்வு மண்டலம் புயலாக கரையை கடக்காது. கடலிலேயே தற்காலிக புயலாக மாறி பின்னர் வலுவிழந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று கணித்திருந்தனர்.
ஆனால், இன்று காலை வானிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதற்கு சாத்தியமான அனைத்து கட்டங்களையும் அடைந்தது. இதனால் புயலாகவே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இப்போது புயல் சென்னையின் தென்கிழக்கே 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. நாளை எதிர்பார்த்தபடி புதுச்சேரியை ஒட்டிய கடல் பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் புயலின் தீவிரம் காரணமாக கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
மொத்தம் 10 வகையான புயல் எச்சரிக்கை கூண்டுகள் இருக்கின்றன. இதில் 6ம் எண் கூண்டு வரை எந்த பெரிய பிரச்னையும் கிடையாது. ஆனால் 7ம் எண் கூண்டு ஏற்றப்படும்போது, புயல் துறைமுகம் வழியாக கரையை கடக்கிறது என்று பொருள். அதே நேரம் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள், படகுகள் ஆபத்தில் இருக்கின்றன என்றும் பொருளாகும்.
எனவே புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் புயல் எச்சரிக்கை காரணமாக அச்சத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்கவும், புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கவும் பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications