அரபிக்கடலில் உருவானது தேஜ் புயல்... தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
சென்னை: அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. இந்த புயல் தமிழகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? எப்போது எங்கு கரையைக் கடக்கும் என்று பார்க்கலாம்.
அரபிக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக மாறியுள்ளது. இது தீவிரப் புயலாக நாளை மாறி, ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே 25ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. தேஜ் புயலானது மும்பையை தாக்கக்கூடும் என்று முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது புயலானது ஓமன் நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே ஏற்பட்டிருந்த அச்சம் நீக்கியுள்ளது.
இந்த புயலுக்கு பெயர் சூட்டியது நம்முடைய இந்தியாதான். தேஜ் என்றால் ஒளி, பளபளப்பான, சக்தி, புத்திசாலித்தனம், மகிமை, பாதுகாப்பு, பிரகாசமான மற்றும் பிரகாசம் என பல அர்த்தங்களை சொல்கிறது. மும்பையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள தேஜ் புயல் அதிகன மழையையும் பயங்கர சூறாவளியையும் உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேஜ் புயலினால் தமிழ்நாடு ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும்.
இதனிடையே கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை நாளைய தினம் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications