உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னையில் மழை கொட்ட போகுது கன்பார்ம்.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பருவமழை சீசன் முடிந்து குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது. மாநிலத்தில் பரவலாகக் குளிரான ஒரு கிளைமேட் தான் நிலவி வருகிறது. இதற்கிடையே இப்போது ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், இதனால் மாநிலத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், பொங்கலன்று மழை இருக்குமா என்பது குறித்தும் விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
கடந்த பருவமழை சீசனில் தமிழ்நாட்டில் ஓரளவுக்கு நல்ல மழையே பெய்திருந்தது. மாநிலம் முழுக்கவே பரவலாக மழை பெய்ததால் முக்கியமான நீர் நிலைகள் அனைத்துமே நிரம்பியுள்ளன. இதனால் இந்த முறை கோடைக் காலத்தில் நீர்ப் பற்றாக்குறை எதுவும் ஏற்படாது என்றே சொல்லப்படுகிறது. பருவமழை சீசன் முடிந்துள்ள நிலையில், இப்போது குளிர் காலம் ஆரம்பித்துள்ளது.

இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே மிக அரிய நிகழ்வாக ஜனவரி மாதம் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதாம். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளையும் நாளை மறுநாளும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "ஒரு அரிதான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி நகர்ந்து, யாழ்ப்பாணத்தை அது அடையும்போது வலுவிழந்து மறையும் . இதனால் டெல்டா, கடலூர், புதுச்சேரி, சென்னை வரையிலான கடலோரப் பகுதிகள் கவனம் பெற்றுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகளில் இன்று இதமான சூழலுடன் லேசான தூறல் அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் பரவலாக மழை பெய்யும். திங்கட்கிழமை ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இந்தச் சாரல் மழையை என்ஜாய் செய்யுங்கள்.
டெல்டா, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட தமிழகக் கடலோர மாவட்ட விவசாயிகள் தங்கள் பயிர்கள் குறித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டி இருக்கும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கட்கிழமை வலுவிழந்த பின், ஈரப்பதம் உள் மாவட்டங்களுக்கு நகர்ந்து, தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், பொங்கல் பண்டிகையின்போது மாநிலத்தில் மழை இருக்காது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications