Montha: மொந்தா புயலால் எங்கெல்லாம் மழை?சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? டெல்டா வெதர்மேன்
சென்னை: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா, இதுவரை உருவான புயலுக்கும் மொந்தா புயலுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கணித்துள்ளார்.
மொந்தா புயலால் சென்னையில் நாளை மழை பெய்யுமா என்பது குறித்து புதிய தலைமுறைக்கு டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கூறியிருப்பதாவது: சென்னையில் இன்று காலை முதலே தொடர்ந்து மிதமான மழை பதிவாகி வருகிறது. இந்த புயலின் நகர்வை பொருத்து இந்த மழை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இரவு நேரங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை காலை வரை விட்டுவிட்டு மழை பெய்யும். அவ்வப்போது மழையின் தீவிரத்தன்மை என்பது மாறிக் கொண்டே இருக்கும்.
மொந்தா புயல்
மொந்தா புயல் வடக்கு பகுதிக்குச் சென்றதும் அந்த நேரத்தில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது சற்று வலுகுறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காக்கிநாடா அருகே கரையை கடந்தாலும் மசூலிப்பட்டினம் முதல் நெல்லூர் வரை தெற்கு பகுதியில்தான் அதிகபடியான பாதிப்பை ஏற்படுத்தும்.
பாதிப்பு
இந்த பாதிப்பு மழையாக இருக்குமே தவிர, காற்றாக இருக்காது. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வடகிழக்கு பருவமழை காலங்களில் உருவான அனைத்து புயல்களுமே மழைப் பொழிவை கொடுக்கக் கூடிய புயல்களாகவே இருந்தன. அந்த வகையில் இந்த புயலும் மழைப் பொழிவை கொடுக்கக் கூடிய தீவிர புயலாகவே இது உருவாகியிருக்கிறது.
வடக்கு பகுதிகள்
புயலின் வடக்கு பகுதிகளிலும் கிழக்கு பகுதிகளிலும் பெரிதாக மேகங்கள் இல்லை. அதே தெற்கு பகுதி, தென்மேற்கு பகுதிகளில் அடர் மேகங்கள் இருக்கின்றன. குறுகிய நேரத்தில் தீவிர மழைப் பொழிவை தெற்கு ஆந்திர பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் எதிர்பார்க்கலாம்.
12 செ.மீ.
சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தில் பரவலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை காலை 8.30 மணி வரை 12 செ.மீ. மேல் மழை நீடிக்கும். புயல் கரையை கடந்ததும் நாளை காலை 11 மணி முதல் வடதமிழக பகுதிகளில் புயலின் தாக்கம் படிப்படியாக குறையும்.
குறைந்த வெப்பம்
இந்த புயல் ஆந்திராவுக்கு செல்வதால் வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும். நவம்பர் 7ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 9 ஆண்டுகள் கழித்து அக்டோபர் மாதத்தில் உருவான ஒரு புயல் ஆந்திரா நோக்கி செல்வதுதான் இதுவரை உருவான புயலுக்கும் மொந்தாவுக்கும் வித்தியாசம்.
5 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை
கடந்த 5 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான புயல்கள் எல்லாம் வடதமிழகத்தில் கரையை கடந்துள்ளன. ஆனால் இந்த மொந்தா ஆந்திராவில் கரையை கடக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.
தமிழகத்திற்கு தாக்கம்
தமிழகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் காற்றழுத்தம், புயல் போன்றவை நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும்.
நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மழை நாளை காலை 8.30 மணி வரை பெய்யும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் நாளை முற்பகலுக்கு மேல் மழை படிப்படியாக குறையும் என்பதுதான் இன்றைய வானிலையின் நிலவரம் ஆகும். இவ்வாறு ஹேமசந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications