வெயிலுக்கு மத்தியில் புரட்டி எடுக்கும் கனமழை.. வெப்பச்சலன மழை தொடரும்.. டெல்டா வெதர்மேன் தகவல்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மே 21 ஆம் தேதி வரை கோடை வெப்பச்சலன மழை தீவிரமடைந்து காணப்படும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலுக்கு மத்தியிலும் சற்று இதமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று பல மாவட்டங்களில் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும்.
மழை தொடரும்
மே 20 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 21 முதல் 24 வரை
மே 21 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.,18 முதல் 22 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வெதர்மேன்
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக வடக்கு & மத்திய உள்மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை தொடரும்.
வரக்கூடிய மணி நேரங்களில் கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மே 21 ஆம் தேதி வரை கோடை வெப்பச்சலன மழை தீவிரமடைந்து காணப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications