வெள்ளத்துயரில் சென்னை மக்கள்! உச்ச நட்சத்திர நடிகர்கள் களத்தில் இறங்கி உதவ வேண்டும்! -தங்கர்பச்சான்
சென்னை: வெள்ளத் துயரில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவுபவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூடவே உச்ச நட்சத்திர நடிகர்கள் களத்தில் இறங்கி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும். ''
''இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.'' இவ்வாறு தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
மிக் ஜாம் புயலால் கொட்டித்தீர்த்த கனமழை பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மீள்வதற்கு குறைந்தது இன்னும் ஒரு வாரமாவது ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்தளவுக்கு கடும் பாதிப்புகளை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறது மிக் ஜாம் புயல். தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், நடிகர்கள் விஷால், விஷ்ணு விஷால், போன்றோர் தங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டதாக கூறி விமர்சனங்களையும் முன் வைத்திருந்தனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முக நூலில் சுளீர் பதிவு வெளியிட்டுள்ள தங்கர்பச்சான், உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications