தென்தமிழகத்திற்கு மழை.. வடதமிழகத்திற்கு வெயில்! குழப்பும் வானிலை.. அப்போ சென்னை கிளைமேட் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வறண்ட வானிலையே நிலவி வரும் நிலையில், வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை காலத்தில் இந்த முறை நல்ல மழை பெய்தது. மாநிலம் முழுக்க இந்த முறை பருவமழை காலத்தில் பரவலாக நல்ல மழை இருந்த நிலையில், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின.

ஆனால், பருவமழை முடிந்த உடனேயே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் மார்ச், ஏப்ரல் மாதம் தான் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும். ஆனால் இப்போது பிப். மாதமே வெப்பம் சில மாவட்டங்களில் சதமடித்துவிட்டது.
வானிலை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவிய நிலையில் மழை எங்கும் இல்லை. மேலும், நேற்றைய தினம் அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கே 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம், ஈரோடு கன்னியாகுமரி, கரூர் மாவட்டங்களில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (பிப்.20) மற்றும் நாளை பிப்.21ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
தென்தமிழகம், வடதமிழகம்: அதேபோல வரும் பிப். 22ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், பிப். 23ஆம் தேதி வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் பிப். 24 மற்றும் பிப்.25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் பிப். 26ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எங்கும் கணிசமாக மழை பெய்யவில்லை. அதேபோல வரும் நாட்களில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ஏப்ரல், மே எனக் கோடைக் காலத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை பிப். மாதமே பல இடங்களில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. வரும் மாதங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications