எமனாக மாறிய கடல்.. மிக்ஜாம் புயலால் சென்னையில் மழைநீர் வடிவதில் சிக்கல்! ஷாக் தந்த அமைச்சர்.. அய்யோ
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது சென்னையில் கடல் கொந்தளிப்புடன் உள்ள நிலையில் சென்னையில் தேங்கிய மழை வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணி குறித்தும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் 'மிக்ஜாம்' புயல் நேற்று உருவானது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி உள்ளது.

அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.
இந்த புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. சென்னை கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மீட்பு படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர்.
அதோடு பல இடங்களில் கார்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இன்று முழுவதும் சென்னையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் மழை வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு நடுவே சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சென்று அதனை வெளியேற்றுவதற்கான பணிகளை அவர் விரைவுப்படுத்தினார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் சேகரமாகி உள்ள மழைநீர் என்பது கடலில் சேர்வதில் சிக்கல் உள்ளது. இதற்கு முன்பு 100 சதவீதம் நீரை கடல் உள்வாங்கிய நிலையில் இப்போது 10 சதவீத தண்ணீரை மட்டுமே வாங்கி கொள்கிறது. 90 சதவீத தண்ணீரை கடல் உள்வாங்காமல் வெளியே தள்ளுகிறது. இதற்கு கடலில் எழுந்துள்ள அலைகளின் அதிகப்படியான சீற்றமே காரணமாகும்.
எனவே இந்த மழை நின்ற பிறகு 4 முதல் 5 மணிநேரம் கழித்து தான் மழை வெள்ளம் என்பது குறையும். எனவே சென்னையில் கால்வாய் மற்றும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். சென்னை மாநகராட்சி சார்பில் 162 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு மக்கள் வர வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications