தொடர் மழை எதிரொலி.. கடலூரில் சில பகுதிகளிலும் விழுப்புரத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
விழுப்புரம்: கடந்த சில நாட்களாகவே விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், நாளைய தினம் (டிச. 4) மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றையொட்டி அமைந்துள்ள பண்ருட்டி, அண்ணாகிராமம் கடலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில், அதுவும் வடதமிழக பகுதிகளில், கனமழை கேப் விடாமல் கொட்டி தீர்த்தது. பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும் கூட கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த கனமழையால் வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்பு மோசமாக இருந்தது. இப்போது தான் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தொடர் கனமழை காரணமாக விழுப்புரத்தில் நாளை (டிச. 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். அதன்படி நாளை விழுப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது. பல பகுதிகளில் மழை வெள்ளம் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலூர் ஆகிய மூன்று பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் அருகே அமைந்துள்ளதால் இந்த பகுதிகளில் மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications