எமர்ஜென்சி கன்ட்ரோல் ரூம் ரெடி.. தயார் நிலையில் 18 டீம்கள்.. ‘புயல்’ வேகத்தில் தமிழக காவல்துறை!
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 540 பேர் கொண்ட 18 பேரிடர் மாநில மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாநில பேரிடர் மீட்புக் குழுவிலும் 30 பேர் என்ற விகிதத்தில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்களை அவசர காலத்தில் பாதுகாக்க 18 குழுக்களும் அதிநவீன உயர்ரக மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். மணிமுத்தாறு, கோவை புதூர், பழனி, ஆவடி ஆகிய பகுதிகளுக்கு தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. இதேபோல, தமிழ்நாடு முழுவதும் 18 மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் போட்ட உத்தரவின் பேரில் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழுவானது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும் மாவட்டங்களில் இந்த குழுவினர் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
முன்னதாக சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். 044 25619206, 044 25619207, 044 25619208 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications