Exclusive: ரெட் அலர்ட் காரணமாக சென்னை வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் ஹோட்டல் புக்கிங் அதிகமாகிறதா?
சென்னை: சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதால், வேளச்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹோட்டல்களில் புக்கிங் செய்ய முயற்சிப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில், வேளச்சேரி, கிண்டி பகுதியில் உள்ள சில ஹோட்டல்களில் விசாரித்தோம். ஆனால், இதுவரை அப்படி புக்கிங் எதுவும் அதிகமாக நடக்கவில்லை என்கிறார்கள், வெள்ளம் ஏற்படும் சூழல் வந்தால் அப்படி நடக்கலாம், இப்போதைக்கு அப்படி எதுவும் இல்லை என்கிறார்கள்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலங்களில் கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. வேளச்சேரி பொதுவாகவே தாழ்வான பகுதி என்பதால் தங்கள் கார்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக பாலங்களின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று முதலே பாலத்தின் மீது கார்கள் அணிவகுக்கத் தொடங்கின.
மேம்பாலத்தில் நிறுத்திய கார்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த அபராதத்தைக் காட்டிலும் கார்கள் வெள்ளத்தில் சேதமடைந்தால் கூடுதல் செலவு வைக்கும் என்பதால் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கனமழை பெய்தால் வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிண்டி பகுதிகளில் தாழ்வான இடங்களில் அதிகளவில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான பகுதிகளில் உள்ள ஹோட்டல்களை புக் செய்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை உறுதி செய்வதற்காக கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் சிலவற்றை தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் தெரிவித்த தகவலின்படி, இப்போதைக்கு அதுபோல, புக்கிங் அதிகமாக நடக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். புக்கிங் வழக்கம்போலவே நடப்பதாகவும் கூறுகின்றனர்.
இதற்கு முன்பாக வெள்ள சமயத்தில் புக்கிங் அதிகமாக நடந்துள்ளது. ஆனால், தற்போது அதுபோல என்கொயரி எதுவும் வரவில்லை, கனமழை பெய்து, வெள்ளம் ஏற்படும் சூழலில் அதுபோன்ற புக்கிங் நடக்கலாம், ஆனால், தற்போது வரை கனமழை எச்சரிக்கை காரணமாக புக்கிங் அதிகரிக்கவில்லை என கிண்டி, தரமணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேளச்சேரியில் உள்ள ஹோட்டல்கள் சில தாழ்வான பகுதியில் இருப்பதால், கனமழை எச்சரிக்கை காரணமாக அவர்களே, தங்கள் ஹோட்டல்களில் தரைத் தளத்தில் மழைநீர் புக வாய்ப்பிருப்பதால், ரூம் புக்கிங்கை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications