சென்னையை மிரட்டும் பெங்கல் புயல்..நாளை பூங்கா,கடற்கரைகள் மூடல்.. கட்டுமான நிறுவனங்களுக்கு ‛வார்னிங்’
சென்னை: ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இந்த வேளையில் 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதாலும் சென்னையில் நாளை பூங்கா, கடற்கரைகள் மூடப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 60 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று என்பது வீச உள்ளது.

தற்போது ஃபெங்கல் புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் புயல் நாளை கரையை கடக்கும்போது சூறைக்காற்று, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் நலன் கருதி நாளை சென்னையில் பூங்கா மற்றும் கடற்கரைகள் மூடப்படுகிறது. கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன்படி ‛அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலை நிறுத்துமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதோடு விளம்பர போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பர போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிப்படுத்தி கொள்ள கேட்டு கெள்ளப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications