"இடி மின்னலுடன் பெய்ய போகுது மழை.." சென்னையில் கிளைமேட் என்ன.. வானிலை மையம் தந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்து பெரும்பாலான இடங்களில் பருவமழை ஆரம்பித்துவிட்டது. பல இடங்களில் கணிசமாக மழை பெய்தே வருகிறது. கோடை வெயிலில் சிரமப்பட்ட மக்களுக்கு இது பெரிய ஆறுதலாக இருந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் (ஜூலை 17), நாளையும் (ஜூலை 18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வரும் ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் என்ன கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சாக தேவாலா (நீலகிரி), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 60 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல மானாமதுரை (சிவகங்கை) 40மிமீ மழையும் கூடலூர், கூடலூர் (நீலகிரி), சித்தம்பட்டி (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை) உள்ளிட்ட இடங்களில் 30 மிமீ மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை, மதுரையில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடலில் இன்று முதல் ஜூலை 19 வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல அரபிக்கடல் பகுதிகளில் இன்று கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்..
நாளைய தினம் (ஜூலை 18) கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications