வாட்டி வதைக்கும் வெயிலுக்கு லீவு எப்போது.. மழைக்கு சான்ஸ் இருக்கா? வெதர்மேன் கொடுத்த ஆறுதல்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடைக்காலம் திரும்பி வந்தது போல வெயில் உக்கிரம் காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் வெயில் நீடிக்கும்.. எப்போது மக்களுக்கு வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை காலம் திரும்பி வந்துவிட்டதோ என மக்கள் நினைக்கும் அளவிற்கு வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த வாரம் வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இரவில் திடீரென மழை பெய்து குளிர வைத்தது.

சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுக்கவே கடந்த சில வாரங்களாகவே இப்படியான சூழல்தான் நிலவியது. ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி வெயில் மிக அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாக மதுரையில் 39.8 செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக ஈரோட்டில் 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை எப்போது பெய்யும் என்ற எதிபார்ப்பு மக்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்னும் சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் எனவும் அதன் பிறகு மக்கள் வெப்பத்தில் இருந்து விடுபடலாம் எனவும் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- "இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வேண்டியிருக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் நிவாரணம் விரைவில் வந்து கொண்டு இருக்கிறது" என பதிவிட்டுள்ளார். முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 14.09.2024 முதல் 20.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (14.09.2024 மற்றும் 15.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
14.09.2024 மற்றும் 15.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 16.09.2024 முதல் 18.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications