புயல் பாதிப்பு.. முதல்வர் மெத்தனம்.. அதிமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டது.. பாய்ந்த எடப்பாடி
சென்னை: அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்பட்டோம். கனமழை பெய்த போதும் கூட விரைந்து துரிதமாக செயல்பட்டதன் காரணமாக மின்சாரத்தை கொடுத்தோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை திருவெற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிய பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அபோது அவர் கூறியதாவது:- மழை ஒருவாரமாக பெய்து கொண்டே இருக்கிறது. ஒருவாரமாக தூங்கிக் கொண்டே இருந்துவிட்டு தண்ணீர் தேங்கிய பிறகு என்ன செய்ய முடியும். மழை பெய்து தண்ணீ தேங்கிய பிறகுதான் என்.எல்.சிக்கு போய் ராட்சத மோட்டாரை கண்டுபிடித்து கொண்டு வந்து தேங்கிய தண்ணீரை வெளியேற்ற இருக்கிறோம் என்கிறார்.

எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள். முதல்வர் சொல்கிறார். இந்தியாவுக்கான வழிகாட்டியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறுகிறார். ஊழலில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மக்கள் இன்று கேட்கிறார்கள். 5 ஆயிரம் கோடி திட்டம் என்று சொல்கிறீர்களே அதில் எவ்வளவு பணிகள் முடிந்துள்ளது.. எவ்வளவு பணிகள் பாக்கியுள்ளது.. இதற்காக செலவிட்ட தொகை எவ்வளவு என்று மக்கள் கேட்கிறார்கள்.
இதில் பெரும் ஊழல் நடந்து இருப்பதாக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்பட்டோம். கனமழை பெய்த போதும் கூட விரைந்து துரிதமாக செயல்பட்டதன் காரணமாக மின்சாரத்தை கொடுத்தோம். அதிமுக ஆட்சி காலத்தில் தான் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கப்பட்டது. இன்றைக்கு பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் எவ்வளவு காற்று அடித்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்றுதான் பூமிக்கடியில் கேபிள் பதித்தோம்.
அதையும் சரியாக பயன்படுத்தவில்லை. நான் சொன்ன துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு எடுத்து இருக்கலாம். இதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். அதோடு, ஏற்கனவே வடகிழக்கு பருவமழை வரும் போது சென்னை அவ்வப்போது பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும்.. ஏன் அரசுக்கு தெரியவில்லை.
எல்லா இடங்களிலும் நியாயவிலைக்கடைகள் உள்ளன. பால் பவுடர்களை நியாயவிலைக்கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்து இருந்தால் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. புயல் வரும் என்று எச்சரிக்கை கொடுத்தும் அரசு மெத்தனமாக இருந்த காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்களுக்கு உடனடியாக புயல் வருவதற்கு முன்பே ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications