அதிகாரிகளை அழைத்த ஆளுநர் ரவி.. தென் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து நாளை அவசர ஆலோசனை
சென்னை: கனமழையால் தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள மீட்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் நாளை ஆளுநர் ஆர் என் ரவி ஆலோசனை மேற்கொள்கிறார்.
திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் 36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடியில் சிறிது நேரம் கூட நிற்காமல் தொடர்ந்து பெய்த மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேருந்து பாதி அளவுக்கு மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் மூழ்கின. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க முடியாமல் மீட்பு படையினர் திணறி வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து தென் மாவட்டங்களின் சில பகுதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையிலிருந்து இந்த 4 மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். வெள்ள மீட்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் நாளை ஆளுநர் ஆலோசனை மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications