பஞ்சபாட்டு பாடும் கர்நாடகா! நிரம்பி வழியும் கேஆர்எஸ் அணை! காவிரி கரையோர மக்களுக்கு வார்னிங்
பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணை நேற்று இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

இதனால் கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. அதிலும் கேஆர்எஸ் அணை நேற்று இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டினம் தாலுக்கா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரியின் குறுக்கே கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) அணை அமைந்துள்ளது.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இதனால் இந்த அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்யாததால் நீர் வரத்து குறைந்த நிலையில் தண்ணீர் திறப்பும் குறைந்துவிட்டது. இந்த நிலையில் கே.ஆர்.எஸ்.அணைக்கு நேற்று முன் தினம் மீண்டும் நீர் வரத்து அதிகரித்ததால் அந்த அணை 2ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று முழுகொள்ளளவுடன் (124.80 அடி) உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரத்து 98 கனஅடியாக உள்ளது. அது போல் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 41 ஆயிரத்து 99 கன அடியாக இருந்தது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 68,825 கனஅடி நீரும் கால்வாயில் இருந்து வினாடிக்கு 1,219 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 41,099 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,282.22 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,965 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று முன் தினம் தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 13,542 கனஅடியாக இருந்தது. இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 90,044 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பியதால் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கால்நடைகளையும் ஆற்றின் அருகே மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications