அக்னி நட்சத்திரத்தை விடுங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் வெளுக்கும் மழை! ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாகக் கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே பரவலாக வெப்பம் அதிகரித்தது. பல்வேறு இடங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில் தான் கடந்த மே 4ம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது.

16 மாவட்டங்கள்
அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல்பூர்வமாக காரணம் இல்லை என்றாலும் இந்தக் காலகட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்றே மக்கள் கருதினர். ஆனால், அதற்கு நேர்மாறாகத் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை
அதாவது இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மதுரை, தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் கூட ஏற்படலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வெப்பம் கணிசமாகக் குறைந்தே வருகிறது. நேற்றைய தினம் கூட ஓரிரு இடங்களில் மட்டுமே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியிருந்தது. இன்றும் மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் நிலையில், இன்றும் வெப்பம் பெரியளவில் அதிகரிக்காது என்றே தெரிகிறது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
இன்றைய தினம் (மே 6) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மே 7ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (06-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications