மக்களை காப்பதே நோக்கம்.. தண்ணீர் வடிந்தபின் இழப்பீடு.. நெல்லையில் அமைச்சர் உதயநிதி பேட்டி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை காப்பதே அரசின் கடமை என்று கூறினார்.
தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாது பெய்த மழையால் 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இரு கரையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. கார்களே மூழ்கும் அளவுக்கு நெல்லையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலும் வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாநகர பகுதியில் மெயின் ரோடுகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்தது. தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம் பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்தது. மெயின் ரோடு, பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நொச்சிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை மீட்பதே முதல் நோக்கம் என்று கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பதே அரசின் நோக்கம். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தண்ணீர் வடிந்த பின் பயிர் பாதிப்புகளை கணக்கீடு செய்து இழப்பீடு தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications