கொங்கு+டெல்டா என.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை தீவிரமெடுத்திருக்கிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மட்டுமின்றி வட மாவட்டங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு ஏழு மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை சராசரியாக 221.6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பான மழையை விட நான்கு சதவீதம் குறைவாகும். அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 53 சதவீதமும், தூத்துக்குடியில் 76 சதவீதமும், திருப்பூரில் 61%, கரூர் மாவட்டத்தில் 57 சதவீதமும், திண்டுக்கல்லில் 60 சதவீதமும் மழை இயல்பை விட குறைவாக பெய்து இருக்கிறது.
சில மாவட்டங்களில் மழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 36 சதவீதம் அளவுக்கு மழை கூடுதலாக பெய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 78% மயிலாடுதுறையில் 48%, கோயம்புத்தூரில் 47%, சென்னையில் 20 சதவீதம் என மழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.11 மற்றும் 12ம் தேதிகளில்: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (06-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (07-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications