நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செ.மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், முக்காணி, அகரம் உள்ளிட்ட பகுதிகள் பல நாட்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வரலாறு காணாத இந்த மழை தென் மாவட்ட மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது. தற்போது வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டும் வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் போக்குவரத்து இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது.

கலெக்டர்களுக்கு உத்தரவு: இந்த நிலையில், தான் நெல்லை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றங்கரையோரத்திற்கு செல்லவோ கூடாது என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசின் வருவாய் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (05.01.2024) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
05.01.2024 அன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06.01.2024 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதி கனமழை: 07.01.2024 அன்று கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
08.01.2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
07.01.2024 அன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
05.01.2024 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
06.01.2024 மற்றும் 07.01.2024 ம் தேதிகளில், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மேற்சொன்ன பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications