இன்னைக்கும் விடாமல் வெளுக்கப் போகுது மழை.. 4 மாவட்டங்கள் ரொம்ப கவனம்! ஜில் ஜில் அப்டேட் கொடுத்த IMD!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.
வடக்கு இலங்கை கடற்கரையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனுடன், லட்சத்தீவு முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைச் சூழல் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக மே 12 முதல் 14 வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக கடல் சீற்றம் அதிகரிக்கக்கூடும் என்பதால், மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் கலந்த காலநிலை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக அதிராமப்பட்டினத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. டெல்டா பகுதிகளில் ஏற்கனவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மழை மேலும் தீவிரமாகும் சூழல் உருவாகியுள்ளது.
கோடை வெயில் கடுமையாக இருந்த நிலையில் தற்போது மழை பெய்யும் சூழல் உருவாகியிருப்பது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்படும் அபாயமும் இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications