இன்று 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்துக் கட்டப்போகுது.. வானிலை மையம் அலர்ட்! உங்க ஏரியாவும் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 10 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுக்க 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த முறை அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வார இறுதியில் இருந்தே, வடகிழக்குப் பருவமழை காலம் துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம் மற்றும் ஆந்திர எல்லை பகுதிகளுக்கு நல்ல பலன் கொடுக்கும் அளவிற்கு இந்த பருவ மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தற்போதே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றும் சென்னையின் சில இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல் 10 ஆம் தேதி வரை, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், வரும் 10 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடமாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் மாத்துாரில் 13 செ.மீ., மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், புதுச்சேரி திருக்கானுார், ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதிகளில் தலா 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications