இன்னும் முடியல! வெளியே போகும்போது குடை அவசியம்! தமிழகத்தில் கனமழை கொட்ட போகுது.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று 14 மாவட்டங்களிலும் நாளைய தினம் 9 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அதன் பிறகு மழை மெல்லக் குறையும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவானது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது.

கொட்டும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவு அணை (சேலம்) 150 மழை பெய்துள்ளது. மேலும், ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 130 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மன்னார்குடி (திருவாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 100 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் கிட்டதட்ட எல்லா இடங்களிலும் மழை கொட்டியுள்ளது.
வெப்பத்தை பொறுத்தவரைக் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 35.9 ° செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.5 ° செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
புயல் என்ன ஆனது: வானிலை மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (24-10-2024) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர புயல் (டானா), வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25.10.2024) அதிகாலை 0130 - 0330 மணிக்கு இடையே வடக்கு ஒரிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது.
கனமழை: தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் அக். 27 முதல் 31 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் எச்சரிக்கை எதுவும் இல்லை. வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா கடற்கரை பகுதிகளில் இன்று மாலை வரை சூறாவளிக் காற்று வடக்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications