கனமழை எதிரொலி! கரூர் - திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. சிவகங்கையில் எப்படி
சென்னை: திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக இன்று கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.இதேபோல் சிவகங்கையில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில் தான் தமிழகத்தில் தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது. விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்தது. நேற்று இரவும் திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில், 10 மணி வரை சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், நாகப்பட்டினம், மதுரை, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 20 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தான் கனமழை காரணமாக இன்று கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல்லில் இன்று ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், இன்று திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததாலும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் கரூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சிவகங்கையில் ஒருசில இடங்களில் அதிகாலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிவகங்கையில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மழை பெய்து வரும் இடங்களில் கல்வி நிறுவனங்கள் முடிவு எடுக்கலாம் என்று சிவகங்கை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications