வெளுக்க போகுது கனமழை.. 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் சம்பவம் காத்திருக்கு! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. அதிலும் சென்னையில் கனமழை கொட்டியது என்றே சொல்லலாம்,

சென்னை நகர் மற்றும் புறநகரில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும். எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
மழை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஆகஸ்ட் 8 மற்றும் நாளை ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல நாளை மறுநாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆகஸ்ட் 11, ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவை பொறுத்தவரை அதிகபட்சமாக அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), திரூர் கேவிகே AWS (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்) தலா 80 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல கொரட்டூர் (திருவள்ளூர்), மின்னல் (ராணிப்பேட்டை), சின்னக்கல்லர் (கோயம்புத்தூர்), வொர்த் எஸ்டேட் செர்முல்லி (நீலகிரி) தலா 70 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. கோவை, நீலகரி என மாநிலத்தில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்தே இருக்கிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 10 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 8 வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் 08.09.2023 & 09.09.2023: கேரளா-கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications