டெல்லியில் கனமழை.. குளமாக மாறிய சாலைகள்.. உற்சாகமாக குதித்து விளையாடிய மக்கள்
டெல்லி: கொட்டித்தீர்த்த கனமழையால் டெல்லி சாலைகளில் பெருவெள்ளம் தேங்கியுள்ளது. குளமாக மாறிய சாலைகளில் டெல்லிவாசிகள் உற்சாகமாக குதித்து விளையாடி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழையால் சாலைகள் உடைந்து துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் இரவில் மழையும் மாறி மாறி பெய்து வந்தது. ஜூலை 12ஆம் தேதி வரை கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருந்தது. சனிக்கிழமையான இன்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. மின்டோ பிரிட்ஜ், மஜ்னு திலா, லுட்யன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நஜாஃப்கர், பாரத் தர்ஷன் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குளம்போல மாறியுள்ளன. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் கார்கள் நீந்தியபடியே செல்கின்றன. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டெல்லி முழுவதும் உள்ள சுரங்கப் பாதைகளில் வாகனங்களை நிறுத்தி போலீசார் கண்காணித்து வரும் நிலையில், தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெருமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications