வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்.. மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த 4 மாவட்ட மின் நுகர்வோர்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாது பெய்த மழையால் 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இரு கரையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது.

வெள்ளத்தால் பேருந்து, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் உள்பட பல ஊர்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 30 வரை உள்ள நிலையில், அபராதம் இன்றி செலுத்த மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 2ம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம். கால நீட்டிப்பானது வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள் பிற மின் நுகர்வோருக்கு பொருந்தும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
2. ஏற்கனவே, மேற்படி மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும். 3. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications