அலர்ட் மக்களே.. 30 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பிச்சு உதற போகுது மழை- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு பிப். மாதம் முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக ஏப்ரல் மாதம் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

மேலும், அரசுமே கூட மதிய நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு வெப்பம் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
கோடை மழை: ஆனால், அதன் பிறகு வானிலை மொத்தமாக மாறியது. பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை பெய்யத் தொடங்கிய நிலையில், மாநிலத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. வரும் நாட்களிலும் மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
30 மாவட்டங்களில் மழை: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது தவிர திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: இதன் காரணமாக சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கலாம் என்பதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றே கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எங்கெல்லாம் மழை: நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல்,திருப்பூர். கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications