உதகையை புரட்டி போட்ட மழை.. வெள்ளத்தில் சிக்கிய ஊட்டி பேருந்து பணிமனை, ரயில் சுரங்கப்பாதை
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர்ந்து இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்து. இந்த மழையால் ரயில்வே பாலத்தில் 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. இதுதவிர ஊட்டி மத்தியப் பேருந்து நிலைய பணிமனை மற்றும் ரயில்வே காவல் நிலையத்திற்குள் மழை நீர் புகுந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அரசியான ஊட்டி சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்கு எப்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். ஆனால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன்பிறகு அடிக்கடி பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்திருந்தது.

கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. . ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்தது. மழை காரணமாக நீர்நிலைகளுக்கான நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு நிலை முடங்கியது. இதேபோல் மின்கம்பங்கள் பல இடங்களில் விழுந்து சிக்கலும் ஏற்பட்டது. அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் கடுமையான உழைப்பால் இயல்புநிலை திரும்பியது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரம் மழையின் தாக்கம் குறைந்து மேகமூட்டமான காலநிலையும், சில சமயங்களில் வெயிலும் மாறி மாறி வந்தது. மெல்ல மெல்ல சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. ஞாயிறு கிழமையான நேற்று ஊட்டியில் மிதமான குளுகுளு காலநிலை நிலவியது. இதனால், ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். கேரள சுற்றுலா பயணிகள் கூட்டமும் வழக்கத்தைவிட அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமையான இன்று வானிலை அடியோடு மாறியது. ஊட்டியில் தொடர்ந்து இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்து. இந்த மழையால் ரயில்வே பாலத்தில் 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. கனமழை காரணமாக ஊட்டி நகரின் பல்வேறு பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தங்கி நின்றது. குறிப்பாக ஊட்டி மத்தியப் பேருந்து நிலைய பணிமனையை சுற்றிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்தனர். இதேபோல் ரயில்வே காவல் நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தததால் காவலர்கள் அவதிப்பட்டனர். ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அதில் சிக்கிய ஒரு வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் தவித்தனர். ஊட்டியில் இன்று பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தொட்ட பெட்டா அருகே உள்ள குந்த சப்பை பகுதியில் சாலயோரம் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் ஊட்டியில் மார்க்கெட் கடைகளுக்குள்ளும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications