3 மாவட்டங்களில் கொட்டுது கனமழை! மணிமுத்தாறு & பாபநாசம் அணைகளின் நிலவரம் என்ன? வெதர்மேன் மேஜர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இப்போது தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இப்போது தமிழகத்தில் எங்குக் கனமழை கொட்டி வருகிறது என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நல்ல நிலையில் இருக்கிறது.

ரெட் அலர்ட்: இதற்கிடையே கடந்த வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலத்தில் பல பகுதிகளிலும் இப்போது கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாகத் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை கூட விடுத்துள்ளது. அங்கு மாலை நேரத்திலேயே கனமழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.
மாலை நேரத்திலேயே மழை மேகங்கள் சூழ கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே அங்கு எந்தளவுக்கு மழை பெய்துள்ளது என்பது தொடர்பான தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை மேகங்கள் பல மணி நேரமாக அங்கேயே இருக்கிறது. எந்தளவுக்கு அங்குக் கனமழை பெய்யும் என்பது குறித்த விவரங்கள் நாளை தெரிய வரும். மாஞ்சோலை மலையை கண்காணிக்க வேண்டும். மணிமுத்தாறு அணை மற்றும் பாபநாசம் அணைகள் நிரம்ப இன்னும் அதிக காலம் இருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுக்குறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மழை இருக்கு: நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications