புயல் ஓய்ந்தும் ஓயாத மழை.. 19 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் சின்னம், நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்திருந்தாலும், மழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் வந்துவிட்டாலே, சென்னை மக்கள் டென்ஷனாகி விடுகிறார்கள். காரணம் மழையின் பாதிப்புதான். இந்த ஆண்டும் புயல் சென்னைக்கு நெருக்கமாக வந்திருந்தது. ஃபெஞ்சல் என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று அதிகாலை மாமல்லபுரத்துக்கும்-புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. வழக்கமாக புயல் கரையை கடந்துவிட்டால் மழையின் தீவிரம் குறைந்துவிடும். ஆனால் இந்த முறை மழையின் தீவிரம் குறையாமல் அதிகரித்தது.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தீவிரம் மிக அதிகமாக இருந்தது. கிருஷ்ணகிரியில் நேற்று ஒரே நாளில் சுமார் 51 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்தது. இதனால் அரூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதியில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. விழுப்புரத்திலும் 50 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் அரசூருக்கு முன்பே நிறுத்தப்பட்டன. அதேபோல திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களும் பாதியில் நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. ரயில் போக்குவரத்தும் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் காட்பாடி அரக்கோணம் வழியாக சென்னை வந்து சேர்ந்திருக்கின்றன.
இன்று இரவு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்கள் சற்று தாமதமாக புறப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயண திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
கடலூர்
பெரம்பலூர்
அரியலூர்
ஈரோடு
கோவை
சிவகங்கை
நாமக்கல்
கரூர்
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
திருப்பூர்
ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications